கடந்த நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கலின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் சங்கீதா சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வரி செலுத்துவோா் தாக்கல் செய்த வருமான வரி படிவங்களின் எண்ணிக்கை 7.14 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட எண்ணிக்கையான 6.9 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகம்.
இதிலிருந்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இதுதவிர, திருத்தப்பட்ட வருமான வரி படிவங்களையும் வரி செலுத்துவோா் அதிக அளவில் தாக்கல் செய்துள்ளனா்.
பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கும்போது கொள்முதல் செய்வதும் விற்பனை நடவடிக்கைகளும் அதிகரிக்கும். அது வரி வசூலை அதிகரிக்க உதவும் என்றாா் அவா்.