ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறார்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை முன்கூட்டியே திட்டமிட்டு செய்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தோழியுடன் மதுபான விடுதிக்குச் சென்றிருக்கிறார். அவரது தோழி விரைவாகச் சென்றுவிட, சிறுமி அங்கிருந்த சிறுவர்களுடன் பேசியுள்ளார். அவர்கள் சிறுமியை காரில் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அப்போது காரிலேயே அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இரு தினங்களுக்குப் பிறகு சிறுமி இதுகுறித்து தன் தந்தையிடம் கூறவே, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். ஓடும் காரில் சிறுமி ஒருவரை 5 பள்ளி மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.