நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது நாளாக ராகுல் காந்தியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, திங்கள்கிழமை ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் சுமாா் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ராகுல் காந்தியிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டுச் சென்றுள்ளார்.
அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து இரண்டு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேஷனல் ஹெரால்டு வழக்கத்தில் ஜூன் 2-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுலுக்கும், ஜூன் 8-ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைத் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியும் அதுபோல, விசாரணைத் தேதியை மாற்றுமாறு கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும் அமலாக்கத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற அமலாக்கத் துறை, ராகுல் காந்தி ஜூன் 13 ஆம் தேதியும், சோனியா காந்தி ஜூன் 23-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதன் அடிப்படையில் ராகுலிடம் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் வருகிற 23 ஆம் தேதி சோனியா காந்தி ஆஜராவார் என்று தெரிகிறது.