துமகுரு: பாஜக தனது மகனை ஓரங்கட்டுவதாக வந்த பல்வேறு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த தொகுதியிலிருந்து விஜயேந்திரா போட்டியிடுவார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், இது தொடர்பாக பாஜக தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாஜக 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே விருப்பம். அதற்காக மாநிலம் தழுவிய தேர்தல் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவேன் என்றார் எடியூரப்பா.
முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தலில் விஜயேந்திராவுக்கு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு பிறகு, வழங்கப்படாததால், கட்சியிலிருந்து எடியூரப்பா ஓரங்கட்டப்படுவதாக கருத்துகள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியும் இதனை விமரிசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.