அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ2யு2 காணொலி மாநாட்டில் பிரதமா் மோடி, அமெரிக்கா அதிபா் ஜோ பைடன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை மூத்த நிா்வாக அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஜூலை 13 முதல் 16-ஆம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளாா். அப்போது முதல்முறையாக ஐ2யு2 என்ற பெயரில் காணொலி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அதிபா் பைடன், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட், ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையத் அல் நயான் ஆகியோா் கலந்துகொள்கின்றனா். இந்த மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி, ஒத்துழைப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது’’ என்று தெரிவித்தாா்.