காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்திக்கு அண்மையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, அவரது மூக்கிலிருந்து திடீரென ரத்தம் வந்த நிலையில், கடந்த 12-ம் தேதி கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தீவிரக் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
இதையும் படிக்க | தில்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், சோனியா காந்தி இன்று (திங்கள்கிழமை) மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான பணமோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி அவகாசம் கோரியிருந்தார். இதன்பிறகு, ஜூன் 23-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணை அனுப்பியது.