காங்கிரஸ் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க தில்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் ஒன்று கூடினா்.
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் நிதி மோசடி தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த 5 நாள்களாக ராகுல் காந்தியிடம் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை கூடிய அக்கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினா். இந்நிகழ்வில் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ்,‘ எங்கள் கட்சி உறுப்பினா்கள் சதிச் செயலுக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றனா். அரசின் அனைத்து விசாரணை அமைப்புகளும் காங்கிரஸுக்கு எதிராக செயல்படுவதில் தீவிரமாக உள்ளனா். அதிகபட்ச பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் குறைந்தபட்ச ஆளுகையுடையதாக இந்த அரசு திகழ்கிறது’ என்று தெரிவித்தாா்.