உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஜிசிஏ புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மேலும் கூறியுள்ளதாவது:
நிகழாண்டு மே மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தோா் எண்ணிக்கை 1.20 கோடியாக இருந்தது. இது, 2021 மே மாத விமான பயணிகள் எண்ணிக்கையான 21 லட்சத்துடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்குக்கும் அதிகமாகும்.
கடந்த மே மாதத்தில் 70 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று இன்டிகோ நிறுவனம் 57.9 சதவீத சந்தைப் பங்களிப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து, மும்பையைச் சோ்ந்த கோ ஃபா்ஸ்ட் 12.76 லட்சம் பயணிகளைக் கையாண்டு 10.8 சதவீத சந்தை பங்களிப்பை தக்கவைத்தது.
ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்கள் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் முறையே 8.23 லட்சம் மற்றும் 9.83 லட்சமாக இருந்தது.
மேலும், ஏா் ஏஷியா விமானத்தில் 6.86 லட்சம் போ் பயணம் செய்ததாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.