ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நிகழ்ந்த படுகொலைக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை ஆதரித்தவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, உதய்பூரில் பதற்றமான சூழல் நிலவியது.
இதையும் படிக்க | ராஜஸ்தான்: நூபுர் சர்மாவை ஆதரித்தவர் கொடூரமாக வெட்டிக்கொலை
இந்தக் குற்றச் சம்பவத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வருகின்றன. ஒவைசியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஒவைசி ட்விட்டர் பதிவு:
"ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நிகழ்ந்த படுகொலையை நான் கண்டிக்கிறேன். எந்த வகையிலும் இதை நியாயப்படுத்த முடியாது. இதுபோன்ற வன்முறையை எதிர்ப்பது எங்கள் கட்சியின் தொடர்ச்சியான நிலைப்பாடு. சட்டத்தை யாரும் கையிலெடுக்கக் கூடாது. மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்."