அமர்நாத் யாத்திரை தொடங்க ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், முதல் பயணிகள் குழு புதன்கிழமை காலை உதம்பூரை அடைந்தனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜம்முவில் இருந்து இன்று அதிகாலை யாத்திரை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தலைவர் லால் சந்த் மற்றும் துணை ஆணையர் உதம்பூர் கிருத்திகா ஜோத்ஸ்னா (ஐஏஎஸ்) ஆகியோர் உள்ளூர் மக்களுடன் பக்தர்களை வரவேற்று அமர்நாத் யாத்திரையை நோக்கி கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உதம்பூர் துணை ஆணையர் தெரிவித்தார்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜூன் 30ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக யாத்ரீகர்கள் செவ்வாய்க்கிழமை இரவு ஜம்முவை அடைந்தனர். அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், உதம்பூர் மற்றும் பால்டலில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக லங்கர் குழுக்கள் தயாராகி வருகின்றன.
அமர்நாத் பயணிகளின் வசதிக்காக ராம்பன் மாவட்ட நிர்வாகத்தால் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, பயணிகள் தங்கும் விடுதி தயார் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்வதற்காக புனிதத் தலத்தை நோக்கிச் செல்லும் வாகன வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்திப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 30ஆம் தேதி தொடங்கும் 43 நாள் வருடாந்திர யாத்திரையை சீர்குலைக்கப் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைச் சரிபார்க்கப் பாதுகாப்புப் படைகள் மோப்ப நாய்களைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.