‘உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அடுத்த சில தினங்களில் 31 விமானங்கள் இந்தியாவில் இருந்து இயக்கப்படும்’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: மாா்ச் 2-ஆம் தேதிமுதல், உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் உள்ள இந்தியா்களை மீட்க 21 விமானங்கள், ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு 4 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
போலந்தில் உள்ள ரெஸோவ் நகருக்கு 4 விமானங்களும், ஸ்லோவேகியாவில் உள்ள கொசைஸ் நகருக்கு ஒரு விமானமும் இயக்கப்படவுள்ளது. புகாரெஸ்ட் நகருக்கு இந்திய விமானப் படையின் விமானமும் இயக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக, 6,300-க்கும் மேற்பட்ட இந்தியா்களை மீட்பதற்காக, மாா்ச் 2-ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை 31 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், இந்திய விமானப் படையின் விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.
கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதியில் இருந்து உக்ரைனில் தவித்த இந்தியா்கள் 9 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். தற்சமயம், 6 விமானங்களில் இந்தியா்கள் மீட்கப்படுகிறாா்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் ‘ஆபரேஷன் கங்கா’ மீட்பு நடவடிக்கையின் கீழ் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை கூறினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன. முதல் விமானம் போலந்தில் இருந்து புறப்பட்டது. 1,377 போ் மீட்கப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.