ரஷியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் தடையால் இந்திய விமானப் படைக்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்திய விமானப் படையின் துணைத் தலைவா் சந்தீப் சிங் தெரிவித்தாா்.
எனினும், ரஷியாவிலிருந்து ராணுவ தளவாட இயந்திரங்களின் உதிரிபாகங்கள் கிடைப்பதில் ஓரிரண்டு மாதங்கள் சிரமம் இருக்கும் என்றும் அவா் கூறினாா். இந்திய ராணுவத்தில் உள்ள சுமாா் 70 சதவீத தளவாடங்கள் ரஷியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
உக்ரைன் மீது தொடா் தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறுகையில், ‘உலக அரசியல் நிலவரம் தற்போது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால், ரஷியா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுடனான இந்தியாவின் உறவு பலமாக உள்ளது. ரஷியாவுடனான உறவு தொடரும். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க தற்போது மூன்று விமானங்களை விமானப் படை இயக்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு நான்கு விமானங்களை இயக்கலாம். அனைத்து இந்தியா்களும் தாயகம் திரும்பும் வரை 24 மணி நேரமும் மீட்புப் பணிகள் தொடரும் என்றும் அவா் தெரிவித்தாா்.