கொச்சி: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களை மேலும் அச்சமடையச் செய்த கருப்பு பூஞ்சைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 50 வயது பெண், அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த ஷீலா ராஜன் (50), குஜராத்தில் குடியேறி வசித்து வருகிறார். இவர் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்தை சந்தித்தவர். அவரது மூளையை கருப்பு பூஞ்சை தாக்கி, வலது கண்ணில் பார்வை பறிபோனது.
அவருக்கு நடத்தப்பட்ட 8 மணி நேர அறுவை சிகிச்சையின் பலனாக, அவர் குணமடைந்து, சுமார் 4 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
அவருக்கு கரோனா பாதிப்புடன் பல உடல்நலக் குறைபாடுகள் இருந்ததால், அவருக்கு சிகிச்சை அளிப்பதில் பல சவால்களை மருத்துவர்கள் சந்தித்தனர். இந்த நிலையில் தான் அவர் சவால்களை எல்லாம் சாதனையாக்கி, இன்று வீடு திரும்பியுள்ளார்.