லக்னௌ: மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்பட உள்ளன. இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்குமா என்ற கேள்விக்கு நாளை விடை கிடைக்கலாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு உள்பட்ட 75 மாவட்டங்களிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்குகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும். பிறகு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெரிவித்துள்ளன. அதேவேளையில், சமாஜ்வாதி கட்சிக்கு கூடுதலான இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால், ஆட்சியமைக்கப் போதுமான இடங்கள் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி இரட்டை இலக்கத் தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒற்றை இலக்க தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஒருவேளை, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கடந்த 30 ஆண்டுகளில், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட கட்சி என்ற சாதனையை பாஜக படைக்கும்.