பிகார் ராணுவ காவல்துறையின் காவலர் ஒருவர் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒரேநாளில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார் .
புதன்கிழமை போரிங் கால்வாய் சாலையில் உள்ள என்ஹேன்ஸ் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், மருந்துகளின் விளைவால் அவர் மறுநாளே இறந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து தனியார் மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர் தப்பிச் சென்றுள்ளனர்.
நாலந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கமல் பிகா கிராமத்தைச் சேர்ந்த மனோரஞ்சன் பாஸ்வான், கயாவில் பணியமர்த்தப்பட்டவர், முடி மாற்று அறுவை சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்தார். முடி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாஸ்வான் தோல் அரிப்பு பற்றி புகார் செய்யத் தொடங்கினார்.
அவரது நண்பர் கமல் குமார் அடுத்த நாள் அவரை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார், ஆனால் பாஸ்வானின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது, அதன் பிறகு கிளினிக்கின் ஊழியர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளித்தனர். ஆனால் ஒரு மணி நேரத்தில் பாஸ்வான் உயிரிழந்தார்.
மிகவும் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். முடி மாற்றுச் சிகிச்சையின் போது ஏற்பட்ட சிக்கல்களால் அவர் இறந்தார். முறையற்ற சிகிச்சையால் மருந்துகளின் எதிர்வினை உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மாரடைப்பால் இறந்ததாகத் தெரியவந்தது. இருப்பினும் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பஸ்வானுக்கு மே 11தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.