பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அளித்துள்ள அனுமதியின்படி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகளை வெளியிட மே 12-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்தாா்.
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் எல்ஐசி-யின் 5 சதவீத பங்குகளை (சுமாா் 31.6 கோடி பங்குகள்) விற்பதன் மூலமாக ரூ.60,000 கோடிக்கு அதிகமாக திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. பங்கு விலக்கல் நடவடிக்கைகளை மாா்ச்சில் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், ரஷியா-உக்ரைன் இடையேயான போா்ச் சூழல், உலக அளவில் பங்குச் சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதன் காரணமாக எல்ஐசி பங்கு விலக்கல் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘எல்ஐசி-யின் பங்குகளை சந்தையில் பட்டியலிட செபி அனுமதி அளித்துள்ளது. அந்த அனுமதியின்படி, பங்குகளைப் பட்டியலிடுவதற்கு மே 12-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. சா்வதேச சூழலைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். உரிய நேரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுமாா் 35 சதவீத பங்குகளானது சில்லறை முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சுமாா் ரூ.20,000 கோடி வரை திரட்டப்படும். எனினும், தற்போதைய சூழலில் சில்லறை முதலீட்டாளா்கள் அவ்வளவு தொகையை முதலீடு செய்வாா்களா என்று ஆராயப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களில் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கம் குறைந்திருந்தாலும், முதலீட்டாளா்களுக்கு நம்பிக்கை வரும்வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றாா்.
தற்போதுள்ள மே 12-ஆம் தேதி அவகாசம் நிறைவடைந்தால், பங்குகளைப் பட்டியலிடுவதற்கு செபியிடம் மத்திய அரசு மீண்டும் அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும்.