உக்ரைனிலிருந்து இதுவரை 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மீட்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் இன்று அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது:
“உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க ஆபரேஷன் கங்கா திட்டம் தொடங்கப்பட்டது. கடும் சவால்களுக்கு இடையே உக்ரைனிலிருந்து 22,500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனிலிருந்து அதிகளவிலான இந்தியர்கள் அங்குள்ள மருத்துவ பல்கலைகழகங்களில் படித்து வந்தனர். பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரஷிய எல்லையான கிழக்கு உக்ரைன் பல்கலைகழகங்களில் படித்து வந்தனர்.
உத்தரப் பிரதேசம், கேரளம், தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், பிகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகளவிலான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்திற்கான விமானங்கள் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் மொத்தம் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்தியா விமானப் படையின் 14 விமானங்களும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களின் 76 விமானங்களும் மாணவர்களை மீட்க பயன்படுத்தப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்கு மத்திய பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அமைச்சகங்கள் உதவி செய்தன.
இந்தியர்களை கீவ் மற்றும் சுமி ஆகிய நகரங்களை மீட்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் உதவி செய்துள்ளனர். மேலும், அண்டை நாடுகளில் இந்தியர்களை மதிப்புடன் நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
உக்ரைன் போரில் எதிர்பாராத விதமாக கர்நாடகத்தை சேர்ந்த ஒரு மாணவர் பலியாகியுள்ளார். அவரின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், காயமடைந்த ஒரு மாணவர் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.”