சமீபத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் பெரும் சர்ச்யை கிளப்பியுள்ளது. 1990களில் காஷ்மீர் பண்டிதர்கள் சொந்த மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமரிசனங்களை பெற்றுவருகிறது. குறிப்பாக, இதன் மூலம் வெறுப்பு பரப்பப்படுவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாஜக ஆதரவுடன் ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி ஆட்சி காலத்தில்தான் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிதர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "மகாத்மா காந்தியே மிகச்சிறந்த இந்து மற்றும் மதச்சார்பற்றவர் என்று நான் நம்புகிறேன்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவங்களுக்கு பாகிஸ்தானும் தீவிரவாதமும்தான் காரணம். இந்துக்கள், காஷ்மீரி பண்டிதர்கள், காஷ்மீரி முஸ்லிம்கள், டோக்ராக்கள் என அனைவரையும் அது பாதித்துள்ளது. அரசியல் கட்சிகள் மதம், சாதி மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் 24 மணி நேரமும் பிளவுகளை ஏற்படுத்தலாம்.
என்னுடைய (காங்கிரஸ்) உள்பட எந்த கட்சியையும் நான் மன்னிக்கவில்லை. சிவில் சமூகம் ஒன்றாக இருக்க வேண்டும். சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்" என்றார்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்கள், கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. சமீபத்தில், இந்த திரைப்படத்தை பிரதமர் மோடி பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.