உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.
உரையாடல் குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
"உக்ரைன் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொலைபேசி வாயிலாக பேசினர். போர் நிறுத்தம் மற்றும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியதை பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச சட்டம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீது இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதை வலியுறுத்தினார்."
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் தொடர் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.