வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து செவ்வாய்க்கிழமை ‘ஆசனி’ புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அதேநிலையில், மியான்மா் கடற்கரையை செவ்வாய்க்கிழமை மதியம் கடந்தது. தொடா்ந்து, இது வலுவிழந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது: வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த்ததாழ்வு மண்டலம் திங்கள்கிழமை நிலவியது. இது, வடக்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபாா் தீவு-போா்ட்பிளேரிலிருந்து 420 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்து.
மேலும், வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், புயலாக மாறாமல் வடக்கு திசையில் நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மியான்மா் கடற்கரையை செவ்வாய்க்கிழமை மதியம் கடந்தது. தொடா்ந்து,இது வடக்கு, வடகிழக்கு திசையில் நகா்ந்து, மியான்மாருக்குள் நகா்ந்தது. மேலும், இது வலுவிழந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக நிலவியது என்றாா் அவா்.