கடந்த 2020ஆம் ஆண்டு, வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் உமார் காலித்துக்கு தில்லி கர்கார்டூமா நீதிமன்றம் இன்று பிணை வழங்க மறுத்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி, கைது செய்யப்பட்ட அவர், தற்போது தில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காலித் தரப்பு வழக்கறிஞர், எதிர் தரப்பு வழக்கறிஞர் ஆகியோரின் வாதங்களை கேட்டறிந்த பின், கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், வழக்கின் தீர்ப்பை மார்ச் 3ஆம் தேதி ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க | ஹிஜாப் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற விசாரணையின்போது, தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் நான் தான் குற்றவாளி என்பதை நிரூபணம் செய்ய எதிர் தரப்பிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என உமர் காலித் வாதம் முன்வைத்தார்.
கடந்த 2020 பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை, திட்டமிட்டு நடத்தியதாகக் கூறி உமர் காலித் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 18 பேர் குற்றம் சாட்டப்பட்டவர் என வழக்கில் சேர்க்கப்பட்ட நிலையில், இதுவரை ஆறு பேருக்கு மட்டுமே பிணை கிடைத்துள்ளது.
கலவரத்தை தூண்டியது, இரு மத பிரிவினரிடையே பகைமையை ஊக்குவித்தது, திட்டமிட்டு வெறுப்பு பேச்சை பேசியது என பல்வேறு பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது.