ரிலையன்ஸ் பவர், ரிலையன்ல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் இயக்குநர் பதவியிலிருந்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி இன்று விலகியுள்ளார். நிறுவனத்தின் பங்குகளை பங்கு சந்தையில் விற்றதையடுத்து அந்த நிறுவனத்தில் பதவியில் இருக்கக் கூடாது என செபி உத்தரவு பிறப்பித்த நிலையில், தனது பதவியை அனில் அம்பானி ராஜிநாமா செய்துள்ளார்.
இதுகுறித்து ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மும்பை பங்கு சந்தையிடம் பகிர்ந்த தகவலில், "பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விதித்த இடைக்கால உத்தரவின்படி, நிர்வாகம் சாராத இயக்குநர் பதவியை வகித்து வந்த அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து விலகியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்கு சந்தையிடம் பகிர்ந்த தகவலின்படி, ரிலையன்ல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்தும் அனில் அம்பானி விலகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி மாதம், நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட பணத்தை வேறு காரணத்திற்காக பயன்படுத்தியதால் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், அனில் அம்பானி மற்றும் மூன்று பேருக்கு செபி தடை விதித்திருந்தது.
இது தொடர்பாக செபி பிறப்பித்த உத்தரவில், "செபியின் கீழ் பதிவு செய்யப்பட்ட எந்த நிறுவனத்திலும் பங்கு சந்தையில் பங்குகளை விற்ற நிறுவனத்திலும் அல்லது பொது மக்களிடமிருந்து நிதி பெறும் நிறுவனத்திலும் அனில் அம்பானி மற்றும் மூன்று பேர் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது. இது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரும்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ராகுல் சரினை கூடுதல் இயக்குநராக நியமித்து இந்த இரண்டு ரிலையன்ஸ் நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.