மூன்று மாநகராட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.
தில்லி பட்ஜெட்டை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தேசிய தலைநகா் தில்லியில் தற்போது வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று மாநகராட்சிகள் உள்ளன. இதில் வடக்கு, தெற்கில் தலா 104 வாா்டுகளும், கிழக்கில் 64 வாா்டுகளும் என மொத்தம் 272 வாா்டுகள் உள்ளன.
இந்த நிலையில், இந்த மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றிணைக்கும் தில்லி மாநகராட்சி (திருத்தம்) சட்டம்- 2022 மசோதாவை மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, வார்டுகளின் எண்ணிக்கையை 272-ல் இருந்து 250 ஆகக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேர்தலைத் தாமதப்படுத்தவே தில்லி மாநகராட்சி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வார்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்ன நியாயம்?
நாங்கள் மசோதாவை ஆய்வு செய்வோம், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று முதல்வர் கேஜரிவால் சவால் விடுத்துள்ளார்.