
உச்சநீதிமன்றம்
தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று பல்வேறு மாநிலங்கள் அரசாணை வெளியிட்டிருந்தது. மேலும், தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்:
“எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
கரோனா தடுப்பூசி செலுத்தாததவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என்று மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.