காசர்கோடு: கேரளம் மாநிலம், காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் நகரில் உள்ள துரித உணவுக் கடை ஒன்றில் "கெட்டுப்போனா ஷவர்மா" சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார், மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கான்ஹாகட் மாவட்டத்தைச் சேரந்தவர் தேவந்தா. இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில், தேவநந்தாவும் அவருடைய பள்ளியில் படிக்கும் 17 பேரும் செருவத்தூர் நகரில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். ஷவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அனைவரும் காசர்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களை "ஒரு குழந்தை மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு பரிசோதித்து சிகிச்சை அளித்து வந்தனர். உணவு விஷத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தேவானந்தாவை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. மீதமுள்ள 17 மாணவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்கள் அனைவரும் சீராக உள்ளனர்" என்று காசர்கோடு மருத்துவனை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகள் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சமையல்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து திரிகரிபூர் தொகுதி எம்எல்ஏ ராஜகோபாலன் கூறுகையில், "உணவு விஷம் கலந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். சுகாதாரத்துறையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்த தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது."
மேலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஷவர்மாவின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராஜகோபாலன் தெரிவித்தார்.
ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.