உக்ரைனில் உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
3 நாள்கள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) டென்மார்க் சென்றடைந்தார். அங்கு தலைநகர் கோபன்ஹேகனில் அரசுமுறை இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "உக்ரைனில் நிலவும் நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தினோம். அங்கு உடனடியாகப் போரை நிறுத்தி பிரச்னையைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.
டென்மார்க் பிரதமர் மேட் ஃபிரடெரிக்சென் கூறுகையில், "எனது செய்தி மிகவும் தெளிவானது. புதின் போரை நிறுத்தி, அங்கு நிகழும் கொலைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ரஷியாவிடம் இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.