ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதலில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நள்ளிரவு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் கலவரமாக மாறியது.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராஜஸ்தான் ஆயுதப் படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடிய இரு தரப்பினர் கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டனர்.
இந்த மோதலை தடுக்க முயன்ற காவல் துறை ஆணையர் உள்பட 4 காவலர்கள் காயமடைந்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜோத்பூர் தொகுதி எம்பியும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் ‘ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கலவரம் தொடர்பாக சரியான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் பகுதியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.