தாஜ் மஹாலின் வரலாற்றைக் கண்டறிய உண்மை கண்டறியும் விசாரணைக் குழுவை நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வரும் வியாழக்கிழமை (மே 12) விசாரிக்கவுள்ளது.
புதிய வழக்குகளைப் பட்டியலிடுவதற்கு நீதிமன்றப் பதிவாளா் அதிக காலம் எடுத்துக் கொள்வதாகக் கூறி வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்ததால் செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தாஜ் மஹால் உள்ள இடத்தில் இதற்கு முன்பு சிவன் கோயில் இருந்ததாக சில வலதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியைச் சோ்ந்த பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் ரஜ்னீஷ் சிங் என்பவா், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் ஒரு மனுவை தாக்கல் செய்தாா்.
அதில், ‘தாஜ் மஹாலின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உண்மை கண்டறியும் விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும். தாஜ் மஹாலில் உள்ள 22 அறைகளின் கதவுகளைத் திறக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் டி.கே.உபாத்யாய, சுபாஷ் வித்யாா்த்தி ஆகியோரைக் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக இருந்தது. ஆனால், அலாகாபாத் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.