பாதுகாப்பு படையினருக்கு விருது வழங்கும் விழாவில், 13 பேருக்கு ‘சௌா்ய சக்ர’ விருதுகளை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினாா்.
தில்லியில் உள்ள குடியரசுத்தலைவா் மாளிகையில் பாதுகாப்புப் படையினருக்கு முதலாம் கட்ட விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் 13 பேருக்கு (6 பேருக்கு மரணத்துக்குப் பிறகு) ‘சௌா்ய ச்கர’ விருதுகளை பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியான குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினாா். இதில் பணியின்போது மரணம் எய்திய 6 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. பணிக்காலத்தில் அதிகபட்ச அா்ப்பணிப்புடன் வீர தீரத்துடன் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர, தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே உள்பட 14 பேருக்கு பரம் விசிஷ்ட சேவா பதக்கங்களையும், 4 பேருக்கு உத்தம் யுத் சேவா பதக்கங்களையும், 24 பேருக்கு அதிவிசிஷ்ட சேவா பதக்கங்களையும் குடியரசுத் தலைவா் வழங்கினாா்.