திருச்சூர் பூரம் விழாவையொட்டி யானைகள் அணிவகுப்பு மற்றும் வண்ணக்குடை மாற்ற நிகழ்வு செவ்வாய்க்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கேரளத்தில் மிகவும் முக்கியத் திருவிழாவான பூரம் திருவிழா, பழமை வாய்ந்த திருச்சூர் வடக்குந்நாதன் கோயிலில் வைகாசி மாதம் பூரம் நட்சத்திர நாளான திங்கள்கிழமை துவங்கியது. பூரம் நட்சத்திரம் இருக்கும் 36 மணி நேரம் இந்த விழா நடைபெறுகிறது.
நேற்று(செவ்வாய்கிழமை) காலை பஞ்சவாத்தியம் முழங்க கணிமங்கலம் சாஸ்தா, சிறிய பூரங்கள் என்று அறியப்படும் 9 கோயில்களின் யானைகள் அணிவகுப்புடன் வடக்குந்நாதர் சன்னதிக்கு வந்தார். இதையடுத்து, பஞ்சவாத்தியம் உள்ளிட்ட பல்வேறு மேளங்கள் இசைக்கப்பட்டன.
மிகவும் பிரபலமான 'இலஞ்சித்தரை மேளம்' பிற்பகல் 2.30 மணியளவில் இசைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக யானைகள் அணிவகுப்பு மற்றும் குடை மாற்றம் நிகழ்வு நடைபெற்றது.
பாறமேக்காவு, திருவம்பாடி கோயில்கள் சார்பில் தலா 15 யானைகள் இந்தக் குடைமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சூர் பூரம் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.