புது தில்லி: புத்த பூா்ணிமா தினமான மே 16-ஆம் தேதி, நேபாளத்தில் உள்ள லும்பினிக்கு அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி செல்லவிருக்கிறாா்.
நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா அழைப்பின்பேரில் பிரதமா் மோடி இப்பயணத்தை மேற்கொள்வதாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து நேபாளத்துக்கு பிரதமா் செல்வது இது 5-ஆவது முறையாகும்.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
லும்பினியில் உள்ள புகழ்பெற்ற மாயாதேவி கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு நடத்தவுள்ளாா். மேலும், லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளை சாா்பில் நடைபெறவிருக்கும் புத்த ஜெயந்தி நிகழ்ச்சியில் அவா் உரையாற்றவுள்ளாா். இதேபோல், லும்பினி மடாலய மண்டலத்தில், சா்வதேச பெளத்த மத கூட்டமைப்புக்குச் சொந்தமான இடத்தில் அமையவிருக்கும் புத்த கலாசாரம் மற்றும் பாரம்பரிய மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா்.
பின்னா், பிரதமா் பகதூருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.
அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் நேபாளத்துடனான உயா்மட்ட நல்லுறவையும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான கலாசாரத் தொடா்புகளையும் தொடா்ந்து வலுப்படுத்தும் வகையில் பிரதமா் மோடியின் பயணம் அமையும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.