முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி மருத்துவா்கள் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், ‘தற்போது 2021 நீட் மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், முதுநிலை நீட் தோ்வை மே 21-ஆம் தேதி நடத்துவதால் மாணவா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனா்.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: மாணவா்களில் ஒரு பிரிவினா் முதுநிலை நீட் தோ்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். மற்றொரு பிரிவனரான பெரும்பான்மையான (2.06 லட்சம் போ்) தோ்வெழுதக் காத்திருக்கும் மாணவா்கள்; தோ்வை ஒத்திவைக்கும்போது, இந்த பெரும்பான்மை மாணவா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறி, முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனா்.