புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை வருகிற ஜூன் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் கோடையில் சிவ பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது.
கடந்த இரு ஆண்டுகள் கரோனா தொற்று காரணமாக இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடைபெறுகிறது.
அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள், எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்து வருவதால் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.