அசைவ உணவு சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவு சாப்பிட்டவர்களை காட்டிலும் தற்போது நாட்டில் அசைவ உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வு சார்பில் 2016ஆம் ஆண்டிற்கு பிறகு 5வது முறையாக 2019 முதல் 2021 வரை நடத்தப்பட்ட உணவு சார்ந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 15 முதல் 49 வயது வரை உள்ளவர்கள் அதிகளவில் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன், சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை நாள்தோறும் அல்லது வாரம்தோறும் சாப்பிடும் ஆண்கள் 83.4 சதவிகிதமாகவும், பெண்கள் 70.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 2015 - 16 ஆய்வின்படி, அசைவ உணவு சாப்பிடும் ஆண்கள் 78.4 சதவிகிதமாகவும், பெண்கள் 70 சதவிகிதமாகவும் இருந்தனர்.
அசைவ உணவை அதிகமாக உட்கொள்ளும் மாநிலங்களில் லட்சத்தீவுகள் 98.4 சதவிகிதம், அந்தமான் நிக்கோபார் 96.1, கோவா 93.8, கேரளம் 90.1, புதுச்சேரி 89.9 ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
இதையும் படிக்க | எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? கார்த்தி சிதம்பரம்
குறைந்தபட்சமாக ராஜஸ்தானில் 14.1 சதவிகிதம் மக்கள் மட்டுமே அசைவ உணவை உட்கொள்கிறார்கள்.
இந்த ஆய்வானது, இரண்டு சுற்றுகளாக ஜூன் 2019 மற்றும் ஏப்ரல் 2021 இடையே 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 707 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது.