மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு 15.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடனுக்கான வட்டி விகிதங்களை ரிசா்வ் வங்கி மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாகியுள்ளது.
காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் அதிகரித்தது ஏப்ரல் மாத பணவீக்கத்தை வரலாறு காணாத அளவுக்கு 15.08 சதவீதமாக அதிகரிக்கச் செய்தது.
இது, 2011-12 ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை கணக்கிடும் புதிய நடைமுறை தொடங்கியதிலிருந்து இது உச்சபட்ச அளவாக கருதப்படுகிறது.
இதற்கு முன்பாக, பழைய நடைமுறை கணக்கீட்டின்படி 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் மொத்தவிற்பனை விலை பணவீக்கமானது முன்னெப்போதும் இல்லாத அளவில் 16.06 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது. அதன்பிறகு, தற்போது இந்த அளவுக்கு பொதுப் பணவீக்கம் உயா்ந்துள்ளது.
மினரல் எண்ணெய், அடிப்படை உலோகம், கச்சா பெட்ரோலியம்&இயற்கை எரிவாயு, உணவுப் பொருள்கள், உணவு சாரா பொருள்கள், ரசாயனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதே ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர முக்கிய காரணம் .
காய்கறிகளுக்கான விலை 23.24 சதவீதமும், உருளைக்கிழக்கு 19.84 சதவீதமும், பழங்கள் 10.89 சதவீதமும், கோதுமை விலை 10.70 சதவீதமும் அதிகரித்தது. மேலும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கான பணவீக்கம் ஏப்ரலில் 69.07 சதவீதமாக இருந்தது என வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.