டேராடூனில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்தில் காவலர்களால் அடித்து துன்புறுத்தப்பட்ட பெண் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஜோகிவாலா காவல்நிலையத்தில் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து, இந்த காவல் நிலையத்தின் பொறுப்பு காவல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மஞ்சு என்பவர் முக்ஹம்பூர் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் தேவேந்திர தியானி என்பவரின் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் தியானி, திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள தில்லி சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த மே 14ஆம் தேதி அந்த வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டுப் போனது. இந்த திருட்டு சம்பவத்தில் மஞ்சு சம்பந்தப்பட்டுள்ளாரா? என தெரிந்துகொள்ள அவரை காவல்நிலையத்திற்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மஞ்சு அவரது கணவருடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது மஞ்சு காவல் நிலையத்தில் உள்ளவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கால்துறை அதிகாரிகள் அவரை பெல்ட் (belt) -ஆல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு மின்சார அதிர்வு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் மஞ்சு அவரது இல்லத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார். அங்கிருந்து அவரது உறவினர்களால் மஞ்சு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜன்மேஜாய் கந்தூரி ஜோகிவாலா காவல்நிலையத்தின் பொறுப்பாளர் தீபக் கைரோலாவை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.