புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற தயாராக இல்லாத விபிஎன் சேவை வழங்குநர்களுக்கு (மெய்நிகர் தனியார் வலைப்பின்னல்) இந்தியாவை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வேறு வழி இல்லை என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
சைபர் விதி மீறல்கள் தொடர்பாக சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்த கேள்விகளுக்கான பதிலை வெளியிட்டு பேசிய அவர், "பாதுகாப்பான நம்பகத்தன்மை வாய்ந்த இணையமே நமக்கு உதவி செய்யும் என்பதை அனைத்து நல்ல நிறுவனங்களும் புரிந்து கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள விதிகளையும் சட்டங்களையும் பின்பற்ற போவதில்லை என எவரேனும் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. உங்களிடம் தகவல்கள் இல்லை என்றால், அதை சேகரிக்க தொடங்குங்கள்.
நீங்கள் விபிஎன் வழங்குநராக இருந்து கொண்டு, உங்கள் சேவையை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறைத்தாலோ விதிகளை பின்பற்றவில்லை என்றாலோ, வெளியேற நினைத்தாலோ வெளிப்படையாக சொல்கிறேன், வெளியேறுவதை தவிர்த்து உங்களுக்கு வேறு வழி இல்லை" என்றார்.
கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்கள், விபிஎன் சேவை வழங்குநர் நிறுவனங்கள், தரவு மைய நிறுவனங்கள் தங்களின் பயனாளர்கள் குறித்த தகவல்களை குறைந்தது ஐந்தாண்டுகள் வரை சேகரித்து வைத்து கொள்வதை மின்னணு அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
புதிய விதியால் சைபர் பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படலாம் என விபின் சேவை வழங்குநர்கள் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதுபற்றி விளக்கம் அளித்த அவர், "சைபர் விதி மீறல் நடக்கும் பட்சத்தில் அதை ஆறு மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். இந்த விதியை மாற்ற போதவில்லை. சைபர் குற்ற சம்பவங்கள், அதன் இயல்பு, வகை, வடிவம் ஆகியவை மிகவும் சிக்கலானவை.
இதன் பின்னணியில் ஆபத்தானவர்கள் உள்ளார்கள். இந்த பலவீனத்தை பல நாடுகள் பயன்படுத்தி கொள்கின்றன. விதி மீறலில் ஈடுபடுபவர்கள் விரைவாக தப்பித்து விடுகின்றனர். எனவே, விசாரணை, தடயவியல் ஆய்வு, சம்பவத்தின் இயல்பு குறித்து புரிந்து கொள்வதற்கு விரைவாக தகவல் கொடுப்பது அவசியம்" என்றார்.
கூகுள், பேஸ்புக், ஐபிஎம், சிஸ்கோ ஆகிய நிறுவனங்கள் உறுப்பினராக உள்ள அமெரிக்க தொழில்நுட்ப அமைப்பு, இந்திய அரசு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.