பெங்களூருவில், கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அதிர்ச்சி அடைந்தனர்.
விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பணியாளர்கள், மோப்ப நாய்ப்படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு, எந்தவித வெடிகுண்டும் கிடைக்காததால், இறுதியாக அது புரளி அழைப்பு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு புரளியை அடுத்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
தொலைபேசி மூலம் புரளியைக் கிளப்பியவரை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.