ஒடிசாவில் ரயிலில் அடிபட்டு 3 யானைகள் பலி
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதியதில் 2 குட்டிகள் உள்பட மூன்று யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
சம்புவா மலைத்தொடரின் ஜோடா வனப் பிரிவுக்கு உள்பட பன்சபானி அருகே 20 யானைகளின் கூட்டம் வியாழன் இரவு 7.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஒரு யானை குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒரு பெண் யானை மற்றும் மற்றொரு குட்டி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்தைத் தொடர்ந்து, யானைக் கூட்டம் வனத்துறையினரை மீட்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தது.
வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை நாள் முழுவதும் கண்காணித்து வந்தனர். மேலும், யானைகள் நடமாட்டம் இருப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், ரயிலின் வேகம் மணிக்கு 25 கி.மீ.ஆகக் குறைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருள் சூழ்ந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று மற்றொரு மூத்த வன அதிகாரி தெரிவித்தார்.
கனிம வளங்கள் நிறைந்த கியோஞ்சார் மாவட்டத்தில் ரயில் விபத்துகளால் யானைகள் அடிக்கடி இறப்பது குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
கடந்த 8 ஆண்டுகளில் 11 யானைகள் ரயில் விபத்துகளாலும், 4 யானைகள் சாலை விபத்துகளாலும், 13 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.