டேராடூன்: இமயமலையில் உள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு ஆன்மிகத் தலங்களுக்கு (சார் தாம்) யாத்ரீகர்கள் செல்ல புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டனர்.
மோசமான வானிலை, பனிப்பொழிவு காரணமாக "சார் தாம்' யாத்திரை செல்வதற்கு இரண்டாவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் மலைப் பகுதியில் சோன்பிரயாக், கெளரிகுண்ட், ஜங்கிசாட்டி ஆகிய இடங்களில் பக்தர்கள் காக்கவைக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் இந்தத் தலங்களுக்குச் செல்ல புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டனர்.
பனிமலையில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் வசதியும் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கேதார்நாத், பத்ரிநாத் கோயில் கமிட்டி தெரிவித்தது.
இந்த நான்கு புனிதத் தலங்களுக்கும் பக்தர்கள் கடந்த மே 3 ஆம் தேதி முதல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மே 25-ஆம் தேதி வரையிலான ஒரு மாதத்துக்குள் இத்தலங்களுக்கு இதுவரை 9,69,610 யாத்ரீகர்கள் சென்றுள்ளனர்.