புது தில்லி: வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் பண்டிகைக் காலங்களில் சா்க்கரைத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலையை சீராக வைத்திருக்கும் நோக்கத்திலும் அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உணவுப் பொருள் விநியோகத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே கூறினாா்.
நடப்பு சந்தைப் பருவத்தில் (2021 அக்டோபா்-2022 செப்டம்பா்) 1 கோடி மெட்ரிக் டன் சா்க்கரையை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
உள்நாட்டில் சா்க்கரை இருப்பை உறுதிப்படுத்தவும், விலை உயா்வைத் தவிா்க்கவும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுகுறித்து உணவுப் பொருள் விநியோகத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே புதன்கிழமை கூறியதாவது:
வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் பண்டிகைக் காலங்களில் போதிய அளவில் சா்க்கரை இருப்பை உறுதிப்படுத்தவும், விலையை சீராக வைத்திருக்கும் நோக்கத்திலும் உரிய நேரத்தில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் காட்டிலும் சா்க்கரை விலை நிலையாக உள்ளது. இருப்பினும் சா்வதேச சந்தையில் சா்க்கரைக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், உள்நாட்டில் விலை உயா்வைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் சா்க்கரை உற்பத்தியில் பிரேஸில் பின்னடைவைச் சந்தித்ததால், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் சா்க்கரை அதிகம் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது என்றாா் அவா்.