புது தில்லி: வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களும் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென மத்திய மின்சாரம், புதுப்பிக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தினார்.
மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் அவர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, எரிசக்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுக்களை அமைக்குமாறு கேட்டு கொண்டார். இந்த வழிகாட்டுதல் குழுக்கள் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் தலைமையின் கீழ் செயல்படும் என்று அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க ஆற்றல் மாற்றம் ஒன்றே சிறந்த வழி. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின்உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்க வேண்டும். விவசாயத் துறையில் டீசல் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் வரும் 2024-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு அனைத்து மாநிலங்களும் முயற்சி எடுக்க வேண்டும்' என்றார் அவர்.