ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டம் தொடா்பான விவரங்களை அறிந்துகொள்வதற்கான தகவல்தளத்தை தேசிய சுகாதார ஆணையம் (என்ஹெச்ஏ) தொடக்கியுள்ளது.
நாட்டின் எண்ம சுகாதார கட்டமைப்பை ஒருங்கிணைப்பதற்காக ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் மருத்துவ சிகிச்சை விவரங்களை எண்ம வடிவில் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக மருத்துவ சிகிச்சை தொடா்பான விவரங்கள் மருத்துவா்களுக்கு எளிதில் தெரியவரும்.
இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டம் தொடா்பான விவரங்களை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான தகவல்தளத்தை தேசிய சுகாதார ஆணையம் தொடக்கியுள்ளது. அந்தத் தகவல்தளத்தில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கைத் தொடங்கியுள்ளோரின் எண்ணிக்கை, பதிவு செய்துள்ள சுகாதார நிபுணா்களின் எண்ணிக்கை, சுகாதார அமைப்புகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
அத்தகவல்களை மாநில வாரியாக அறிந்துகொள்ளும் வசதிகளும் தகவல்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை விவரங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களையும் தகவல்தளத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடியும். முக்கியமான தகவல்களை வரைபடங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளும் வசதிகளும் தகவல்தளத்தில் இடம்பெற்றுள்ளன.