தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் ராகுல் காந்தியுடன், 2016ஆம் ஆண்டு துன்புறுத்தல் காரணமாக ஹைதராபாத் பல்கலையில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தாய், செவ்வாய்க்கிழமை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கிறாா்.
இன்று காலை நடைப்பயணம் தொடங்கியதும், ராதிகா வெமுலா, ராகுலுடன் சிறிது தூரம் நடந்துவந்தார்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டேன். காங்கிரஸ் கட்சி, பாஜக-ஆர்எஸ்எஸ் வசமிருந்து அரசியல்சாசனத்தைக் காப்பாற்ற வேண்டும், ரோஹத் சட்டத்தை அமல்படுத்தி, ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், தலித் சமுதாயத்துக்காக அவர்களது தரப்புக்கான பிரதிநிதிகளை அதிகப்படுத்த வேண்டும், அனைவருக்கும் உரிய நீதி மற்றும் கல்வி கிடைக்க வேண்டும் என்றும் ராதிகா வெமுலா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன், ராதிகா வெமுலா பங்கேற்ற புகைப்படத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஜனவரி 17, 2016ல், 26 வயதான தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்டது, உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிவெறிக்கு எதிராக நாடு தழுவிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது.