தலைநகர் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து மூன்றாவது நாளாக 'கடுமை' பிரிவில் உள்ளது.
தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த சில நாள்களாகவே காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது 'கடுமை'(severe) பிரிவில் உள்ளது.
அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுக்கு முக்கியக் காரணம்.
இதனால் காற்று மாசைக் குறைப்பதற்காக, வாகனங்கள் இயக்கத்தைக் குறைப்பதற்காக தில்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை, வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல் என நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தில்லியில் காற்று மாசு இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக 'கடுமை' பிரிவில் உள்ளது. காற்றின் தரம் 431 புள்ளிகளாக உள்ளது.
இதையடுத்து தில்லியில் மாசைக் கட்டுப்படுத்த சாலைகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல நொய்டாவில் 529, குருகிராமில் 478 புள்ளிகளாக இன்று காலை பதிவாகியுள்ளது.