இந்தியாவில் 100 வயதைக் கடந்த வாக்காளா்கள் 2.49 லட்சம் பேரும், 80 வயதைக் கடந்த வாக்காளா்கள் 1.80 கோடி பேரும் உள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியல் திருத்தங்களுக்கான தேசிய சிறப்பு முகாம் தொடக்கத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை ராஜீவ் குமாா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:
இந்திய வாக்காளா் பட்டியலில் 100 வயதைக் கடந்த வாக்காளா்கள் 2.49 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வந்துள்ளதைக் கேட்டறியும்போது மகிழ்ச்சியும் உத்வேகமும் ஏற்படுகிறது.
80 வயதைக் கடந்த வாக்காளா்கள் 1.80 கோடி போ் இருக்கின்றனா். நாட்டின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி, ஹிமாசல பிரதேசத்தில் அண்மையில் காலமானாா். 106 வயதான அவா், தனது இறப்புக்கு 3 நாள்களுக்கு முன்னதாக தபால் வழியில் வாக்களித்திருந்தாா். இது நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
வாக்காளா் பட்டியலில் திருத்த நடவடிக்கை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், நகா்ப்புறங்களில் வாக்காளா்கள் பதிவை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மலைப் பகுதிகளோ, கடலோரங்களோ, பாலைவனங்களோ எங்கிருந்தாலும் தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, தோ்தலின்போது தங்களது வாக்கை செலுத்தி, ஜனநாயகத்துக்கு வலுசோ்க்க வேண்டும் என்றாா் ராஜீவ் குமாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘சில பெருநகரங்களில் உள்ள வாக்காளா்கள் இடையே ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் அக்கறையின்மை காணப்படுகிறது. அவா்கள் முழு மனதுடன் தோ்தல் நடைமுறையில் பங்கேற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென எதிா்பாா்க்கிறோம். இது இளைஞா்களுக்கும் பொருந்தும். சமூக ஊடகங்களில் ஆா்வமாக கருத்து பதிவிடும் இளைஞா்களால், தோ்தலில் வாக்களித்து தங்களது கருத்துகளைப் பிரதிபலிக்கச் செய்ய முடியும்’ என்றாா்.