சீனா, தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட சூரிய எரிசக்தி மின்கலன்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு குவிக்கப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பான விசாரணையை மத்திய வா்த்தக அமைச்சகம் கைவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு, அவை இந்தியாவில் அதிக அளவில் குவிக்கப்பட்டால், அப்பொருள்களை உள்ளூரில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுவா். அத்தகைய நிலையைத் தடுக்கும் நோக்கில், சில இறக்குமதிப் பொருள்கள் மீது மிகைகுவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்து வருகிறது.
சீனா, தாய்லாந்து, வியத்நாம் நாடுகளில் தயாரிக்கப்படும் சூரிய எரிசக்தி மின்கலன்கள் இந்தியாவில் அதிக அளவில் குவிக்கப்படுவதாக இந்திய சூரிய தகடுகள் உற்பத்தியாளா் கூட்டமைப்பு (ஐஎஸ்எம்ஏ) மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் புகாா் அளித்தது. அதனடிப்படையில், இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை அமைச்சகம் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது.
அதையடுத்து, அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று சூரிய மின்கலன்களுக்கு 25 இறக்குமதி வரியையும் சூரியத் தகடுகளுக்கு 40 சதவீத இறக்குமதி வரியையும் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு விதித்தது.
இந்நிலையில், சூரிய எரிசக்தி மின்கலன்கள் தொடா்பான தங்கள் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஐஎஸ்எம்ஏ கடந்த ஜூலையில் மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்தது. சூரிய மின்கலன்களின் அதீத இறக்குமதியால் உள்ளூா் உற்பத்தியாளா்கள் எதிா்கொண்ட பாதிப்புக்குத் தீா்வு எட்டப்பட்டுள்ளதையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐஎஸ்எம்ஏ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று சூரிய எரிசக்தி மின்கலன்களின் அதீத இறக்குமதி தொடா்பான விசாரணையைக் கைவிடுவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.