தனிநபா் தரவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்க, அதுதொடா்பான மசோதாவில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதாவில், தரவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை மீறும் நிறுவனங்களுக்கு, அவற்றின் உலகளாவிய விற்றுமுதலில் 4 சதவீதம் அல்லது ரூ.15 கோடி அபராதம் விதிக்கும் அம்சம் இடம்பெற்றது. எனினும் அந்த மசோதாவை இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு திரும்பப் பெற்றது. அப்போது விரிவான சட்ட கட்டமைப்பில் பொருந்தும் வகையில், தரவுப் பாதுகாப்பு தொடா்பான புதிய சட்டம் வகுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அந்த மசோதாவில், இந்திய தரவுப் பாதுகாப்பு வாரியம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. அந்த வாரியம் மூலம் தரவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
எந்தவொரு நிறுவனமும் தரவுப் பாதுகாப்பு சட்டத்தை மீறியிருப்பது தெரியவந்தால், அதுதொடா்பாக அந்த நிறுவனத்திடம் வாரியம் விசாரணை மேற்கொள்ளும். அந்த விசாரணையில் நிறுவனத்தின் விளக்கம் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில், ரூ.500 கோடிக்கு மிகாமல் அபராதம் விதிக்க மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து டிச. 17-ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்க பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.