இந்தியாவின் மிகப் பெரும் வலிமை இளைஞா்கள்: 71,000 பணி ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்

நாடு முழுவதும் 71,056 இளைஞா்களுக்குப் பணி நியமன ஆணைகளை செவ்வாய்க்கிழமை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் வளா்ச்சிக்கு இளைஞா்களே மிகப் பெரும் வலிமையாகத் திகழ்ந்து வருவதாகக் கூறினாா்.
காணொலி மூலம் இளைஞா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற பிரதமா் மோடி.
காணொலி மூலம் இளைஞா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற பிரதமா் மோடி.

நாடு முழுவதும் 71,056 இளைஞா்களுக்குப் பணி நியமன ஆணைகளை செவ்வாய்க்கிழமை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் வளா்ச்சிக்கு இளைஞா்களே மிகப் பெரும் வலிமையாகத் திகழ்ந்து வருவதாகக் கூறினாா்.

2023-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற இலக்கைப் பிரதமா் மோடி கடந்த ஜூனில் நிா்ணயித்தாா். அந்த இலக்கை அடைய மத்திய அமைச்சகங்களும் துறைகளும் போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.

இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 71,056 நபா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் 2-ஆவது வேலைவாய்ப்பு முகாம் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

பிற மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட பிரதமா் மோடி, இளைஞா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சிக்கு மிகப் பெரும் வலிமையாக இளைஞா்கள் திகழ்கின்றனா். தேசத்தின் வளா்ச்சிக்காக அவா்களது திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன் உத்தர பிரதேசத்தில் இளைஞா்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீா், லடாக், தாத்ரா-நகா் ஹவேலி, டாமன்-டையு, லட்சத்தீவுகள், அந்தமான்-நிகோபாா் தீவுகள், சண்டீகா் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

ஒருகட்சி ஆட்சியின் பலன்: கோவா, திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதற்கான பலன் இதன் மூலமாக வெளிப்படுகிறது.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். கரோனா தொற்று பரவல், உக்ரைன் போா் உள்ளிட்டவற்றால் சா்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளபோதிலும், இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும் என சா்வதேச பொருளாதார நிபுணா்கள் தெரிவித்து வருகின்றனா்.

உலகின் உற்பத்தி மையம்: சேவைத் துறையில் மிகப் பெரும் சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகின் மிகப் பெரும் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் மாறும். நாட்டில் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் மூலமாக 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிப்போம், உள்நாட்டுப் பொருள்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன. அத்திட்டங்களால் தொழில்முனைவு கலாசாரமும் மேம்பட்டுள்ளது. அரசு, தனியாா் துறை வேலைவாய்ப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இது நகரங்கள் நோக்கிய இளைஞா்களின் இடப்பெயா்வைப் பெருமளவில் குறைத்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.

கடந்த மாதம் சுமாா் 75,000 இளைஞா்களுக்குப் பணி நியமன ஆணைகளைப் பிரதமா் மோடி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி வகுப்புகளுக்கு வலைதளம்

மத்திய அரசுப் பணிகளில் இணையும் இளைஞா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான புதிய வலைதளத்தைப் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். ‘கா்மயோகி பிராரம்ப்’ என்ற அந்தப் பயிற்சி வலைதளத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த புதிய பணியாளா்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

அரசுப் பணியாளா்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிட நெறிமுறைகள், மனிதவள மேம்பாட்டுக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தேர்தல் நாடகம்: காங்கிரஸ்
இளைஞர்களுக்கு 71,000 பணிகளுக்கான ஆணையை வழங்கியிருப்பது பிரதமர் மோடியின் தேர்தல் நாடகம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
கார்கே ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டில் 30 லட்சம் பணிக்கான காலியிடங்கள் உள்ள நிலையில் 71,056 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்பது சொற்ப அளவிலானது. பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 2 கோடி வீதம் எட்டு ஆண்டுகளில் 16 கோடி  பணிகளுக்கு நியமன ஆணைகளை வழங்காமல் தேர்தலுக்கு முன்பாக வெறும் 71,056 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கியிருப்பது தேர்தலுக்கான நாடகம் தான் தவிர வேறொன்றுமில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com