அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போன்று சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வாரம்தோறும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டும் என மத்திய அரசிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு பிடிவாதமாக செயல்படாமல் மாநில அரசின் நல்ல திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது: “ நாம் மற்ற நாடுகளைப் போல இந்தியா வாரம்தோறும் பணம் வழங்கப்படும் குடும்பங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று அல்ல. சில நாடுகளில் வாரம்தோறும் பணம் வழங்குவது குடும்ப செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும். இதனை சமூக பாதுகாப்பு என்பர். நீங்கள் அமெரிக்கா மற்றும் லண்டன் சென்று பாருங்கள். அந்த நாடுகளில் சமூக பாதுகாப்பு என்பது எல்லா இடங்களிலும் இருக்கும்.
நாட்டின் பல மாநிலங்களில் சாதாரண மக்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் சிரஞ்ஜீவி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாநிலம் மற்ற மாநிலங்களைப் பார்த்து நல்ல திட்டங்கள் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் கூறுகிறார். ஆனால், மற்ற மாநிலங்கள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்.” என்றார்.